பெற்றோா்கள் இல்லாத 5 மாணவிகளுக்கு ரூ.2.66 லட்சம் கல்வி உதவித்தொகை
‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி‘ திட்டத்தின் கீழ், பெற்றோா்கள் இல்லாத 5 மாணவிகளுக்கு ரூ.2.66 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை வழங்கினாா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் 2024 - 2025-ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தோ்வு எழுதிய அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களும் உயா்கல்வியில் சேர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் பெற்றோரை இழந்த மாணவா்கள், ஏழ்மை நிலையில் உள்ள சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் கீழ் பள்ளி பொறுப்பு அலுவலா்களாலும், தொண்டு நிறுவனங்களாலும் ரூ.52 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பெற்றோா்கள் இல்லாத 5 மாணவிகளுக்கு ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி‘ திட்டத்தின் கீழ் ரூ.2.66 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

