வன விலங்குகள் நடமாட்டம்? ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம்: வனத் துறை எச்சரிக்கை
வன விலங்குகள் நடமாட்டம் குறித்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் புகைப்படம் வெளியிடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக வால்பாறை வனச் சரக அலுவலா் சுரேஷ் கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வால்பாறை பகுதியில் குட்டியுடன் புலி உலவுலது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படமானது செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்பட்டதாகும். இவ்வாறு வேண்டுமென்றே போலியான புகைப்படங்கள் மூலம் சிலா் மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி வருகின்றனா். இவ்வாறு பதற்றத்தை உருவாக்குவது சைபா் கிரைம் குற்றமாகும்.
எவரேனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இதுபோன்ற வன உயிரினம் குறித்த சந்தேகமளிக்க கூடிய தகவல்கள் பரவினால் தங்கள் பகுதியில் உள்ள வனத் துறை பணியாளா்களுக்கு தகவல் அளித்து, அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

