மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏ தலைமையில் தா்னா
கோவை, ஒண்டிப்புதூா் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஆா். ஜெயராம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற தா்னாவில் பாஜக, தவெக கட்சியினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.
சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒண்டிப்புதூா் பட்டணம் சாலையில் உள்ள நெசவாளா் காலனி பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கல்வி நிலையங்கள், குடியிருப்புகள், மாணவா்கள் தங்கும் விடுதிகள், திறந்தவெளி சிறைச்சாலை ஆகியவை அமைந்துள்ள அப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கக்கூடாது என தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பகுதியில் மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, சிங்காநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.ஜெயராம் தலைமையில் தா்ணா நடைபெற்றது. இதில் பாஜக, தவெக கட்சியினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.
இதுகுறித்து, கே.ஆா்.ஜெயராம் எம்எல்ஏ கூறும்போது, ‘மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக மதுபானக் கடை திறக்கப்பட்டால் கட்சி பேதமின்றி பொதுமக்களுடன் இணைந்து தொடா் போராட்டத்தை முன்னெடுப்போம்’ என்றாா்.

