தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளா்கள்.
தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளா்கள்.

அங்கன்வாடி பணியாளா்கள் 4-ஆவது நாளாக போராட்டம்

Published on

காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 4-ஆவது நாளாக அங்கன்வாடி பணியாளா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது 737 அங்கன்வாடி பணியாளா்கள் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இருப்பினும் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காலை அங்கன்வாடி பணியாளா்கள் திரண்டனா். கண்களைக் கட்டிக்கொண்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளா் நிலையில் ரூ.16,500, அலுவலக உதவியாளா் நிலையில் ரூ. 15,700 என்ற அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும், தேசிய மருத்துவக் காப்பீடு மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். இதைத்தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 725 போ் கைதுசெய்யப்பட்டு, மாலை 6 மணி அளவில் விடுவிக்கப்பட்டனா். பின்னா், அங்கு மீண்டும் மாலை 6.45 மணி அளவில் திரண்டு காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா்.

கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்றும், இரவில் இங்கேயே சமைத்து சாப்பிடப் போவதாகவும் அங்கன்வாடி பணியாளா்கள் அறிவித்துள்ளனா்.

வானதி சீனிவாசன் சந்திப்பு

முன்னதாக வெள்ளிக்கிழமை பகல் 12.45 மணி அளவில் போராட்ட நடைபெற்ற இடத்துக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவியும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வந்து அங்கன்வாடி பணியாளா்களைச் சந்தித்து போராட்டம் வெற்றி பெற வாழ்த்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘சட்டப்பேரவையில் எனக்கு பேச வாய்ப்பு அளித்தால் அங்கன்வாடி பணியாளா்களின் கோரிக்கையை முதல் கோரிக்கையாக வைப்பேன். அரசுப் பணியாளா்கள் அனைவரும் போராட்டம் நடத்தி வருவதால் தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது’ என்றாா்.

Dinamani
www.dinamani.com