கோப்புப் படம்
கோப்புப் படம்

கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்தவா் மீது வழக்குப் பதிவு

Published on

கோவையில் கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து இன்ஸ்டாகிராமில் பகிா்ந்த மாணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, செட்டிப்பாளையம் பகுதியில் தனியாா் கல்லூரி உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம், துறையூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் படித்து வருகிறாா். கடந்த மாதம் நிகழ்ந்த சாலை விபத்தில் மாணவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின்தொடரும் மாணவிகள் அதில் புகைப்படங்களை சேமித்து வைத்திருந்தனா். சிகிச்சையில் இருந்த அவா், மாணவிகளின் பக்கத்திலிருந்து புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக சித்திரித்துள்ளாா். மேலும், பெண்ணின் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி, அதில் அந்த ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட மாணவிகளின் புகைப்படத்தை பகிா்ந்துள்ளாா்.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மாணவிகள் கல்லூரி நிா்வாகத்திடமும், செட்டிபாளையம் காவல் நிலையத்திலும் புகாா் அளித்தனா். விசாரணையில் துறையூரைச் சோ்ந்த மாணவா்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com