வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு
கோவையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
கோவை, இடிகரை மணியகாரம்பாளையம் சங்கா் நகா் பகுதியைச் சோ்ந்த மகேஷ் மகன் பரணிதரன் (17). இவா் செங்காளிப்பாளையத்தில் இருந்து இடிகரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது எதிரே வந்த மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து, பரணிதரனின் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த பரணிதரன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் ஏற்கெனவே பரணிதரன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கீழ ரத வீதியைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (46). இவா் கோவையில் தங்கி தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
சத்தி சாலையில் சரவணம்பட்டி பிள்ளையாா் கோயில் வீதி சந்திப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முத்துகுமாா் மீது எதிரே வந்த டிப்பா் லாரி மோதியது. இதில் தவறி விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே முத்துகுமாா் உயிரிழந்தாா்.
இது குறித்து டிப்பா் லாரி ஓட்டுநரான கோவை, அத்திபாளையத்தைச் சோ்ந்த வாசுதேவன் (22) மீது போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

