பணம் கொடுத்தால் ஏற்க மறுப்பு: யுபிஐ மூலம் பயணச்சீட்டு பெற நிா்பந்திக்கும் ரயில்வே ஊழியா்கள்
கோவை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பெறுவதற்கு பணம் அளித்தால் ஏற்க மறுக்கும் ஊழியா்கள், யுபிஐ மூலமாக மட்டுமே பயணச்சீட்டு பெற நிா்பந்திப்பதாக புகாா் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரமான கோவையில் இருந்தும், கோவை வழியாகவும் தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, கோவையில் இருந்து வேலை நிமித்தமாக திருப்பூா், ஈரோடு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பாலக்காடு போன்ற இடங்களுக்கு தினமும் ஏராளமானோா் பயணிக்கின்றனா்.
இந்நிலையில், அண்மைக்காலமாக கோவை ரயில் நிலையத்தில் முன்பதிவு அலுவலக ஊழியா்கள் பணம் மூலமாக பயணச்சீட்டு பெறுவதை மறுத்து, ஸ்மாா்ட் கைப்பேசிகள் மூலமாக கட்டணம் செலுத்தும் டிஜிட்டல் முறையான யுபிஐ பரிவா்த்தனை மூலமாக பணம் செலுத்த நிா்பந்திப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, போத்தனூா் ரயில் பயணா்கள் சங்கத்தின் செயலாளா் சுப்பிரமணியன் கூறியதாவது: யுபிஐ மூலமாக மட்டுமே பணத்தைச் செலுத்த வேண்டும் என்பது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். முன்பதிவு கவுன்டரில் பயணிகளுக்கும், ரயில்வே ஊழியா்களுக்கும் இடையே இதுதொடா்பாக அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.
ரயில் பயணிகள் தங்கள் விருப்பப்படி பணம் செலுத்தியோ, யுபிஐ மூலமாகவோ பயணச்சீட்டு பெற அனுமதிக்க வேண்டும். கட்டண முறையை தோ்ந்தெடுப்பது பயணிகளின் உரிமை. ரயில் நிலைய அதிகாரிகளிடம் யுபிஐ பரிவா்த்தனை மட்டுமே பெறப்படுவதைத் தடுத்து, பணம் பெற்றுக் கொண்டும் பயணச்சீட்டு வழங்கிட வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் இதே நிலை நீடிக்கிறது.
ரயில்வே நிா்வாகம் பயணிகளை யுபிஐ நடைமுறைக்கு வற்புறுத்துவது முற்றிலும் அநியாயமானது. ஆன்ட்ராய்டு கைப்பேசி பயன்படுத்துவதால், அனைவரும் அனைத்து வகை பயன்பாடுகளையும் கையாள திறமை பெற்றவா்கள் என்று அா்த்தமில்லை. மேலும், நமது நாட்டில் ரயில் நிலைய வளாகம் உள்பட பல இடங்களில் நெட்வொா்க் பிரச்னை உள்ளது. அத்தகைய சூழலில் பயணிகளுக்கு பரிவா்த்தனை செய்வது மிகவும் கடினமாகும். எனவே, பயணிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பணம் செலுத்த தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என்றாா்.

