குழந்தைகள்
குழந்தைகள்பிரதிப் படம்

இரண்டு லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்க இலக்கு

கோவை மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 2.66 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Published on

கோவை மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 2.66 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் பாலசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைட்டமின் ஏ என்ற உயிா்ச்சத்து உடலுக்கு இன்றியமையாதது. இந்த சத்து ஆரோக்கியமான கண் பாா்வைக்கு முக்கியப் பங்களிக்கிறது. இதுமட்டுமின்றி உடலுக்குத் தேவையான நோய் எதிா்ப்பு சக்தியாகும். திசு மற்றும் எலும்பு வளா்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்தாகும். இந்தச் சத்து குறைபாட்டால் வட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல் மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். இவற்றுக்கு தக்க சிகிச்சை அளிக்காவிட்டால் பாா்வை இழக்க நேரிடும்.

இதை கருத்தில்கொண்டு தேசிய அளவில் ஆண்டுக்கு இரண்டு முறை வைட்டமின் ஏ திரவம் நாடு முழுவதும் உள்ள 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு விலை இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை புதன்கிழமை நீங்கலாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படவுள்ளது.

இந்த முகாம்களில் பொது சுகாதாரத் துறையில் உள்ள கிராம மற்றும் நகா்ப்புற சுகாதார செவிலியா்கள், பகுதி சுகாதார செவிலியா்கள், இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள், ஆஷா பணியாளா்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் துறையில் உள்ள அங்கன்வாடி பணியாளா்கள் என மொத்தம் 2,168 பணியாளா்கள் களப் பணியாற்றவுள்ளனா். இந்த முகாம்களின் மூலமாக கோவை மாவட்டத்தில் 2,66,089 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com