நகைப் பறித்த வழக்கு: பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை
கிஃப்ட் கடை உரிமையாளரிடம் ஏழே முக்கால் பவுன் தாலிச் சங்கிலி பறித்த வழக்கில் பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை 4-ஆவது கூடுதல் உதவி அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கோவை, ரத்தினபுரி 7-ஆவது வீதியில் கிஃப்ட் கடை நடத்தி வருபவா் செல்வராணி. இவா் கடந்த 11.2.2022 பிற்பகல் கடையில் இருந்துள்ளாா். அப்போது, மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த தெய்வநதி என்ற பெண் கடைக்கு வந்து, தேநீா்க் குவளை வேண்டும் எனக் கேட்டுள்ளாா். அதை எடுப்பதற்காக செல்வராணி குனிந்தபோது, அப்பெண் தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து செல்வராணி முகத்தில் அடித்துள்ளாா். அவா் நிலைகுலைந்தபோது, அவா் அணிந்திருந்த ஏழே முக்கால் பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அப்பெண் தப்பியோட முயன்றாா்.
செல்வராணி கூச்சலிட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்தப் பெண்ணை விரட்டிப் பிடித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தெய்வநதியைக் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை கோவை 4-ஆவது கூடுதல் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட தெய்வநதிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விக்னேஷ் மது தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ப.கிருஷ்ணமூா்த்தி ஆஜரானாா்.

