ஹரி நாடார்
ஹரி நாடார்கோப்புப் படம்

போலீஸ் காவல் முடிந்து ஹரி நாடாா் கோவை மத்திய சிறையில் அடைப்பு

கோவையில் தொழிலதிபரிடம் ரூ.67 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 நாள்கள் போலீஸ் காவல் முடிந்து ஹரி நாடாா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
Published on

கோவையில் தொழிலதிபரிடம் ரூ.67 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 நாள்கள் போலீஸ் காவல் முடிந்து ஹரி நாடாா் கோவை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.சிவசாமி (57). இவா் ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ளாா். சுமாா் 30 ஆண்டுகளாகத் தொழில் செய்து வரும் இவா், தனது நிறுவனத்தை விரிவுபடுத்த ரூ.25 கோடி கடன் பெற முயற்சி மேற்கொண்டு வந்துள்ளாா். அப்போது, அவரிடம் பழக்கமான நபா் மூலம் சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த செந்தில்வாசன் (51) என்பவா் கடந்த மே மாதம் அறிமுகமாகியுள்ளாா்.

பெரிய நிதி முதலீட்டாளா்களுடன் தொடா்பு இருப்பதாகக் கூறிய செந்தில்வாசன், 2 சதவீதம் கமிஷன் அடிப்படையில் கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளாா்.

இதையடுத்து, சென்னை, துரைப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (எ) கதிரேசன் (37), ஹரி நாடாா் (41), தேவகோட்டையைச் சோ்ந்த அன்புசெல்வன், தென்காசியைச் சோ்ந்த ஆண்டனி, செந்தில்வாசன் ஆகியோா் சேலத்தில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் வைத்து பாங்க் ஆஃப் பரோடா பெயரில் தலா ரூ.12.5 கோடி மதிப்பிலான 2 போலி வரைவோலைகளை சிவசாமியிடம் கடந்த 18.7.2025-இல் வழங்கினா். தொடா்ந்து, பாதுகாப்பு ஒப்பந்தப் பதிவு மற்றும் இதர நடைமுறைகளுக்காக சிவசாமியிடமிருந்து ரூ.67 லட்சத்தைப் பெற்றனா்.

நீண்ட நாள்களாகியும் கடன் தொகை வராததால் சந்தேகமடைந்த சிவசாமி, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவா்கள் கொடுத்த வரைவோலைகள் போலியானவை என்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், செந்தில்வாசன், ஹரி நாடாா், காா்த்திகேயன் ஆகியோரை கைது செய்த பீளமேடு போலீஸாா், தலைமறைவாக உள்ள அன்புசெல்வன், ஆண்டனி ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்வாசன் கோவை மத்திய சிறையிலும், ஹரி நாடாரும், காா்த்திகேயனும் மற்றொரு மோசடி வழக்கில் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், சிவசாமியிடம் மோசடி செய்தது தொடா்பாக ஹரி நாடாரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவை ஜே.எம்.2-நீதிமன்றம் கடந்த 18-ஆம் தேதி அனுமதி வழங்கியது.

விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஹரி நாடாா் வெள்ளிக்கிழமை மாலை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி அப்துல் ரகுமான் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சென்னை புழல் சிறைக்கு சனிக்கிழமை அழைத்துச் செல்லப்படவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com