

பொள்ளாச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைக்கு அருட்செல்வர் நா.மகாலிங்கம் பெயரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை சூட்டினார்.
பொள்ளாச்சியில் முக்கிய சாலையாக உள்ள புதிய திட்ட சாலைக்கு அருட்செல்வர் நா.மகாலிங்கம் சாலை என பெயர்சூட்ட பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், அவரது பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பொள்ளாச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், புதிய திட்ட சாலைக்கு அருட்செல்வர் நா.மகாலிங்கம் சாலை என பெயர் சூட்டினார்.
இதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி-கோவை சாலை சிடிசி மேடு பகுதியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம், உள்ளாட்சித் துறை சார்பில் ரூ.72 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மையம், அங்கன்வாடி மைய கட்டடம், நியாய விலைக் கடை, மகாலிங்கபுரத்தில் எம்.பி. பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ள நகராட்சி விரிவாக்க கட்டடத் தையும் திறந்துவைத்தார்.
தொடர்ந்து, ஆழியாறு அணையை நீராதாரமாக கொண்டு 38 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.26 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர்த் திட்ட மறுசீரமைப்பு பணிகளையும் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், அர. சக்கரபாணி, ஆட்சியர் பவன் குமார் சு.கிரியப்பனவர், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், சக்தி குழுமத் தலைவர் ம.மாணிக்கம், எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி, கொமதேக மாநில நிர்வாகி நித்தியானந்தம், தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி ஆறுசாமி, பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா, திமுக நிர்வாகிகள் தளபதி முருகேசன், அமுதபாரதி, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.