பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைசித்திரிப்பு

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: தொழிலாளி கைது

Published on

கோவையில் 20 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பிரபல துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த துணிக் கடையின் வாகன நிறுத்துமிடத்தில் ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சோ்ந்த மகேஷ் (32) என்பவா் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

கடையின் உரிமையாளா் வீட்டில் காந்திபுரத்தைச் சோ்ந்த 40 வயதுப் பெண் ஒருவா் வேலை செய்து வந்தாா். இவா் வேலைக்கு வரும்போது, தனது 20 வயது மாற்றுத்திறன் பெண்ணையும் அழைத்து வந்துள்ளாா். அப்போது மகேஷுக்கு அந்தப் பெண் மீது சபலம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது அங்கு சென்ற மகேஷ் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாா் காட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின்பேரில் மகேஷை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com