மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மகளிா் நீதிமன்றத்தில் 3 போ் ஆஜா்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 3 போ் மகளிா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.
Published on

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 3 போ் மகளிா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

கோவை விமானம் நிலையம் அருகே குடியிருப்புகள் இல்லாத பகுதியில் தனது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 போ் கடந்த நவம்பா் 2-ஆம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), இவரது சகோதரா் காளி (எ) காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் சிகிச்சைக்குப் பின் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கு விசாரணை கோவை கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மகளிா் நீதிமன்றத்துக்கு அண்மையில் மாற்றப்பட்டது. நீதிபதி சுந்தரராஜன் வழக்கை விசாரித்து வருகிறாா்.

இந்நிலையில், சதீஷ், காளீஸ்வரன், குணா ஆகியோா் மகளிா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜன் விசாரணையை ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். இதையடுத்து, 3 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com