கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் கழிப்பறையில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
திருச்சியைச் சோ்ந்தவா் மணி (71). இவருக்குக் காலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்காகக் கோவை, சிங்காநல்லூா் காமராஜா் சாலையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த மே 16-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவரை அவரது மகன் பாலகிருஷ்ணன் உடனிருந்து கவனித்து வந்தாா்.
கடந்த 18-ஆம் தேதி அதிகாலை சுமாா் 3 மணியளவில் மணி, மருத்துவமனை வாா்டில் உள்ள கழிப்பறைக்குச் சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக கால் வழுக்கி தரையில் விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.










