மாநகராட்சி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்: அ.கணேசமூர்த்தி வாக்குறுதி
By DIN | Published On : 01st April 2019 08:51 AM | Last Updated : 01st April 2019 08:51 AM | அ+அ அ- |

தனக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தால், ஈரோடு மாநகராட்சிப் பகுதி மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என திமுக கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உறுதியளித்தார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஈரோடு மக்களவை தொகுதி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, ஈரோடு மாநகரில் ஞாயிற்றுக்கிழமை வாக்குச்சேகரித்தார்.
ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோயில், பச்சியம்மன் கோயில் கமலா நகர், ஓம்காளியம்மன் கோயில் வீதி, கிருஷ்ணம்பாளையம், சிந்தன் நகர், ஜீவா நகர், படேல் நகர், காவேரி சாலை, சிதம்பரனார் வீதி, பாவேந்தர் வீதி, வீரப்பன் சத்திரம் கொத்துக்காரர் தோட்டம், கலைமகள் வீதி, எம்ஜிஆர் வீதி, பெரியவலசு, குமலன்குட்டை, கணபதி நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஈபிபி நகர், சூளை, கொங்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உரங்களின் விலை தினசரி மாற்றத்தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவற்றின் விலை மீண்டும் நிலையாக மாற்றி கட்டுக்குள் கொண்டு வரப்படும். உயர்த்தப்பட்ட கேபிள் டிவி கட்டணங்கள் முன்பிருந்த அளவிலேயே கட்டணங்கள் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றார். இந்தப் பிரசாரத்தின்போது, திமுக மாநகர செயலர் சுப்பிரமணி, வீரப்பன்சத்திரம் பகுதி செயலர் நடராஜன், திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.