அந்தியூர் வனப் பகுதியில் உடல்நலக்குறைவால் காட்டெருமை உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
அந்தியூர் வனச்சரகம், தென் பர்கூர் காப்புக்காடு, அத்தாணி மேற்கு தோப்புமடுவு சரகத்தில் வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெண் காட்டெருமை உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, வனச்சரக அலுவலர் ப.பாலகிருஷ்ணன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் அசோகன் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்த காட்டெருமையைப் பரிசோதித்தனர்.
பெண் காட்டெருமைக்கு சுமார் 15 வயதிருக்கலாம், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தது பரிசோதனையில் தெரிந்தது. இதையடுத்து, காட்டெருமையின் உடல் பிற வன உயிரினங்களுக்கு உணவாக அப்படியே விடப்பட்டது.