வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தம்
By DIN | Published On : 17th April 2019 08:31 AM | Last Updated : 17th April 2019 08:31 AM | அ+அ அ- |

வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச்செல்லும் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குப் பதிவு மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் 186 வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணி ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் தெரிவித்ததாவது: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்படவுள்ள 9,238 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களை வாக்குப்பதிவுக்காக எடுத்துச் செல்ல ஒரு மண்டலத்துக்கு ஒரு வாகனம் என 186 மண்டலத்துக்கு 186 வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த வாகனத்துடன் ஒரு மண்டல அலுவலர், ஒரு உதவி அலுவலர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் என 3 நபர்களுடன், பாதுகாப்பினை கருத்தில் கொண்டு காவலர்களுடன் வாகனம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வாகனத்துடன் வாக்குப் பதிவுக்குத் தேவையான எழுது பொருள்கள், படிவங்கள், சாக்கு பைகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய கூடுதலாக ஒரு வாகனம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த இரு வாகனங்களும் பாதை விளக்கப்படத்தில் உள்ளபடி வாக்குப் பதிவு மையத்துக்கு சென்று வாக்குப் பதிவு மைய முதன்மை அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்.
பாதுகாப்பு வைப்பறையில் இருந்து இயந்திரங்களைக் கொண்டு செல்லும் 186 வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார். தொடர்ந்து சித்தோடு, சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையம், கூடுதல் வைப்பறை மற்றும் ஊடக மையம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ம.தினேஷ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர்(தேர்தல்) ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...