கைப்பற்றப்படும் பணம், நகை குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்: தேர்தல் பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தல்
By DIN | Published On : 30th March 2019 07:17 AM | Last Updated : 30th March 2019 07:17 AM | அ+அ அ- |

வாகனச் சோதனைகளின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்டு பறிமுதல் செய்யப்படும் நகை, பணம், பரிசுப் பொருள்கள் குறித்து உடனுக்குடன் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினருக்கான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கோபி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி, வட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள்:
அரசு மற்றும் தனியார் பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்களின் அடிப்பாகங்களிலும் சோதனை நடத்த வேண்டும். சந்தேகப்படும்படியாக இருந்தால் இருசக்கர வாகனங்களில் உள்ள இருக்கைகள் அடிப்பாகத்தையும் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
அதிகாலை, நள்ளிரவு நேரங்களில் கிராமங்களில் உள்ள நடமாட்டங்கள் குறித்தும் சோதனை மேற்கொள்ள வேண்டும். கட்சி நிர்வாகிகள் செல்லும் வாகனங்களின் முன்னால், பின்னால் செல்லும் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
சோதனையின்போது கைப்பற்றப்படும் பணம், நகை, பொருள்கள் குறித்து உடனுக்குடன் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குழுக்கள் தினமும் ஒரே இடத்தில் மாறுதல் செய்யாமல் வெவ்வேறு இடங்களில் மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் காவல்துறையினர், தேர்தல் கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படைக் குழுவினர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...