வாக்கு எண்ணிக்கையின்போது தொகுதிக்கு 5 இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண முடிவு
By DIN | Published On : 05th May 2019 03:44 AM | Last Updated : 05th May 2019 03:44 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது சட்டப்பேரவைத் தொகுதிக்கு 5 இயந்திரங்கள் வீதம் மொத்தம் 30 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி, அதன் பிறகு வெற்றி விவரத்தை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
வாக்கு எண்ணிக்கை நாளான வரும் 23 ஆம் தேதி காலை 7.30 மணிக்குள் தபால் வாக்குச் சீட்டுகள் எடுத்து வரப்பட்டு 8 மணிக்குள் எண்ணும் பணி தொடங்கும். அதேநேரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்து வரப்பட்டு 8.30 மணிக்குள் எண்ணிக்கை தொடங்கும். மொத்தம் 14 மேஜைகளில் தலா ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் என மூவர் பணியமர்த்தப்படுவர். ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும், வேட்பாளர்களின் முகவர்களிடமும் காண்பித்து வாக்கு எண்ணிக்கையை தெரிவிப்பார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பின் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு தலா 5 வி.வி.பேட் இயந்திரம் என ஒரு மக்களவைத் தொகுதியில் 30 வி.வி.பேட் இயந்திரங்களை தனியாக எடுத்து அதில் உள்ள யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள 1,800 வி.வி.பேட் இயந்திரங்களில் சுழற்சி முறையில் 30 இயந்திரங்களை தனியாக எடுத்து அதில் உள்ள ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும்.
இந்த எண்ணிக்கையும் அதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் ஒட்டு மொத்தமும் சரியாக இருப்பதை உறுதி செய்து வெற்றி விவரம் அறிவிக்கப்படும். தபால் வாக்குகளை தனி பணியாளர்கள் எண்ணுவார்கள்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எண்ணுபவர்களே வி.வி.பேட் ஒப்புகைச்சீட்டு விவரத்தையும் எண்ணி அறிவிப்பார்கள். வி.வி.பேட் ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கை நடைமுறைக்கு வந்துள்ளதால் வெற்றி விவரம் அறிவிக்க வழக்கத்தைவிட கூடுதலாக 2 மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்றனர்.