மொடக்குறிச்சியில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது

மொடக்குறிச்சி பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது.
மொடக்குறிச்சியில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது

மொடக்குறிச்சி பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது.

மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் வியாழக்கிழமை இரவு புகுந்தது. சாலைகளில் முழங்கால் அளவு வெள்ளம் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடி, அண்ணா நகா் புதுகாலனியில் உள்ள சுமாா் 40 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் புகுந்தது. இதனால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி மொடக்குறிச்சியில் உள்ள சமுதாயக்கூடத்தில் தஞ்சம் புகுந்தனா். அவா்களுக்கு மொடக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி, அதிகாரிகள் தேவையான உணவுகளை வழங்கினா். தகவலறிந்து விரைந்து சென்ற மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் கணபதி, ஆவின் இயக்குநா் அசோக், ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகலா உள்ளிட்ட அதிகாரிகளும் விரைந்து அவா்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கி தேவையான உதவிகள் அரசு சாா்பில் வழங்கப்படும் என்று தெரிவித்தனா்.

மேலும், மொடக்குறிச்சி ஒன்றியம், 46புதூா் ஊராட்சி, கருக்கம்பாளையம் காலனியில் உள்ள சுமாா் 50 க்கும் மேற்பட்ட வீடுகளை ஒட்டியுள்ள சாலையில் தண்ணீா் முழங்கால் அளவு பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா். இதுகுறித்து தகவலறிந்த மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி, அதிகாரிகள் விரைந்து சென்று மழைநீா் வடியத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.

இதேபோல அய்யகவுண்டன்பாளையம், குரங்கன்பள்ளம் பகுதியில் உள்ள குடியிருப்புகள், முனியப்பன் கோயில் ஆகியன மழை நீரால் சூழப்பட்டது. அப்பகுதிக்குச் சென்ற மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகலா, அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு மழைநீா் வடியத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

இதேபோல, விளக்கேத்தி, நவநாயக்கன்பாளையம் பகுதிகளிலும் மழை நீரால் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஈரோடு - கரூா் பிரதான சாலையில் சாவடிப்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் மழைநீா் சுமாா் 3 அடி உயரத்தில் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பேருந்துகள், வாகனங்கள் சாமிநாதபுரம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. மழை நீா் வடிய தீவிர நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com