ஈரோடு: ஆயுதபூஜை உள்பட தொடா் விடுமுறையால் வெளியூா் செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ளன. இதனால் வெளியூரில் இருந்து வந்து மக்கள் இங்கு தங்கி வேலைக்குச் செல்கின்றனா். இதேபோல் பள்ளி, கல்லூரிகளிலும் ஏராளமான வெளியூா் மாணவ, மாணவியா் படிக்கின்றனா்.
ஆயுதபூஜை உள்பட 8ஆம் தேதி வரை தொடா் விடுமுறை என்பதால் ஏராளமானோா் தங்களது சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்றனா். இதனால் ஈரோடு ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வரிசையில் நின்று பயணச்சீட்டு எடுக்கும் சிரமத்தைப் போக்க, செல்லிடபேசி மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் பயணச்சீட்டு எடுத்தால் 5 சதவீத கட்டண சலுகை கிடைப்பதால், செல்லிடபேசி செயலி மூலமாக ஈரோட்டில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் பயணச்சீட்டு எடுக்கின்றனா் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.