நாட்டு சர்க்கரையில் அஸ்கா கலப்பை தடுத்து, ரசாயன கலப்பு இல்லாத நாட்டு சர்க்கரை உற்பத்தியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொ.ம.தே.க., பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
ஈரோட்டில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
பெரிய சர்க்கரை ஆலைகள், ரசாயனம் பயன்படுத்தி, வெள்ளை சர்க்கரையை (அஸ்கா) தயாரிக்கின்றனர். இவை உடல் நலத்துக்கு கேடானது என்பதால், நாட்டு சர்க்கரை, வெல்லத்துக்கு மக்கள் மாறுகின்றனர். ஒரு கிலோ அஸ்கா, 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாட்டு சர்க்கரை, 90 ரூபாய் முதல், 140 ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படுகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான நாட்டு சர்க்கரை தயாரிப்பாளர்கள், விவசாயிகளிடம் கரும்பை வாங்கி கரும்பு சாற்றில் இருந்து தயாரிக்காமல், ஆலைகளிடம் அஸ்கா சர்க்கரையை வாங்கி, கலப்படம் சேர்த்து, அதிக விலைக்கு மக்களிடம் நாட்டு சர்க்கரை என விற்கின்றனர். கரும்பு விவசாயிகளிடம் கரும்பை வாங்காமல், பலரும் நாட்டு சர்க்கரை தயாரிப்பதாக புகார் எழுந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
அஸ்கா சர்க்கரையை நிறம் மாற்றி, நாட்டு சர்க்கரை எனக்கூறி விற்பனை செய்வதை, அரசும், அதிகாரிகளும் வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் எம்.பி., சின்ராஜ், நாட்டு சர்க்கரை ஆலைகளில், அதிகாரிகள் துணையுடன் ஆய்வு செய்து, பல முறைகேட்டை கண்டறிந்துள்ளார். நாமக்கல் மாவட்ட நாட்டு சர்க்கரை ஆலை உரிமையாளர்களிடம், அவர் பேசியபோது, ‘தமிழகத்தில் உள்ள அனைத்து நாட்டு சர்க்கரை ஆலைகளிலம் ஆய்வு செய்து தவறை சரி செய்தால் மட்டுமே, சீரான விலையில் நாட்டு சர்க்கரையை விற்க முடியும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, நாட்டு சர்க்கரையில் கலப்படம் செய்வோருக்கு அதிகாரிகள் துணை போகாமல், மக்களின் நலன் கருதி துாய்மையான நாட்டு சர்க்கரை விற்பனைக்கு வழி செய்ய வேண்டும். இவ்வாறு கேட்டுக் கொண்டார்.