ஈரோட்டில் நாளை முதல் 15ஆம் தேதி வரை பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் இந்தியாவில் ஊடுருவி இன்று தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. முதல் முதலில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு இந்த மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியதால் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் அரசு வழிகாட்டி நெறிமுறைகள் உடன் முதற்கட்டமாக 50 சதவீத அரசு பேருந்துகள் இயங்க தொடங்கியது.
ஈரோடு, கோயமுத்தூர், கரூர், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் ஒரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இந்த மண்டலத்திற்குள் பேருந்து போக்குவரத்து நடைபெற்றது. பிற மண்டலத்திற்குள் செல்ல இ-பாஸ் முறை அமலில் இருந்தது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 13 கிளைகளில் 800 பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வந்தன. இதில் முதற்கட்டமாக 280 உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதேபோல் கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் 270 தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்தன.
இதில் முதற்கட்டமாக 135 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதைப்போல் 160 மினிபேருந்துகளில் முதற்கட்டமாக 30க்கும் குறைவான மிதி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக பிற மாவட்டங்களிலும் கரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. இதற்கு பொது போக்குவரத்தும் ஒரு முக்கிய காரணமாக கருதப்பட்டது. இதையொட்டி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக முதலமைச்சருடன் மாவட்ட ஆட்சியர்கள், காணொலி காட்சி மூலம் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்டத்திற்கு மாவட்டம் செல்ல போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. பிற மாவட்டத்திற்கு செல்ல இ- பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மேலும் நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் 15ஆம் தேதி வரை மாவட்டத்தி்ற்குள் பேருந்து போக்குவரத்து இயங்காது. மாவட்டத்திற்குள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இ- பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.