மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த சிறந்த நிறுவனத்தின் தமிழக அரசு விருதை ஈரோடு சக்தி மசாலா குழுமத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
ஈரோடு மாமரத்துபாளையத்தில் சக்தி மசாலா நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவன தலைவராக. பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குனராக சாந்தி துரைசாமி செயல்படுகின்றனர். இந்நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு "உங்களால் முடியும். உழைப்புக்கு எதுவும் தடையில்லை" என அவர்களுக்கு வாழ்வியல் நம்பிக்கை கொடுத்து பணிபுரிய வைத்துள்ளார்கள். கடந்த 30 வருடங்களாக ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
கரோனா காலத்திலும் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பணி புரிகிறார்கள்.
இதற்காக இவர்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது. இந்திய நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தில் சிறப்பு வாய்ந்த, திறமை கொண்டவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. சக்தி மசாலா நிறுவனத்திற்கு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கு தொடர்ந்து செயல்படுவதற்கும் அதிக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த சிறந்த நிறுவனத்திற்கான தமிழக அரசின் சிறப்பு விருதினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
விருதை தலைவர் துரைசாமி, நிர்வாக இயக்குனர் சாந்திதுரை ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விருது பெற்ற சக்தி மசாலா நிறுவனத்துக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.