விவசாய நிலங்களில் சாய ஆலைகள் நடத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்து கவுந்தப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பயனாளிகளுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் நீர்நிலைகளில் சாயக்கழிவு நீரை கலப்பது குற்றம். ஆற்றில் மட்டுமல்லாமல், விவசாய நிலங்களிலும் சாயத் தொழிற்சாலையை சட்டவிரோதமாக நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ இயற்கையின் கொடையான நீராதாரங்கள் பாதிக்கும் வகையில் சாயக்கழிவு நீரை வெளியேற்றுவோர் மீது குற்றவியல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.