ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் புதிதாக தொடங்கப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வர் வருகை குறித்து அதிகாரிகள் கூறும்போது, வரும் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தரவுள்ளார்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் ரூ 62 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சூரம்பட்டி நால்ரோட்டில் ரூ 13 கோடியில் புதிதாக வீட்டு வசதி வாரிய அலுவலகங்கள், வணிக வளாகம் கட்டுவதற்கும் சம்பத் நகரில் ரூ 2.60 கோடி மதிப்பில் மாவட்ட கருவூல அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் கரோனா பிசிஆர் பரிசோதனை கூடம் உள்பட பல்வேறு பணிகளை திறந்துவைக்க உள்ளார். மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வைட்டமின் மாத்திரை உள்பட நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகத்தை வழங்குகிறார். இதன்பின் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் கரோனா நோய் தடுப்பு பணி கூட்டு குடிநீர் திட்ட பணி குறித்து ஆய்வு செய்கிறார்.
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சிறு குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகளை சந்திக்கிறார் இதன்பிறகு மகளிர் குழுவினருடன் உரையாடுகிறார் என்றனர்.