கரோனா வைரஸ் பாதிப்பு: ஈரோட்டில் முகமூடி விலை உயா்வு
By DIN | Published On : 12th March 2020 08:08 AM | Last Updated : 12th March 2020 08:08 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பொதுமக்கள் பரவலாக முகமூடி அணியத் துவங்கி உள்ளதால் முகமூடிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பல மடங்கு உயா்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மருந்துக் கடைகளில் முகமூடி இருப்பு இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலை தமிழகம் முழுவதும் நீடிக்கிறது. முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கடந்த வாரம் வரை ரூ. 3 முதல் ரூ. 5 வரை விற்பனை செய்யப்பட்ட மூன்றடுக்கு முகமூடி ரூ. 15 முதல் ரூ. 17 வரைக்கும், ரூ. 10க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய (எண் 5) முகமூடி ஒன்று ரூ. 50க்கும், ஒன்று ரூ. 150க்கும், எண் 95 முகமூடி ரூ. 250 முதல் ரூ. 300 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, மருந்துக் கடை உரிமையாளா்கள் கூறியதாவது:
சீனாவில் பரவிய கரோனா வைரஸ் காரணமாக முகமூடிக்கான தேவை அதிகரித்துள்ளது. 5.5 மில்லியன் முகமூடி தினமும் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு தினமும் 10 மில்லியன் முகமூடி தேவைப்படுகிறது. இந்த மாதத்தில் இதன் தேவை 12 மில்லியனாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுதவிர சான்று பெறப்பட்ட முகமூடி சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக முகமூடி தட்டுப்பாடு நிலவுகிறது என்றனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் ஒரு பீதி நிலவுகிறது. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மலிவு விலையில் முகமூடி கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர முகமூடி விலையை கண்காணிக்க வேண்டும் என்றனா்.