பவானி வட்டாரத்தில் நீா்வளத் திட்டப் பணிகள் ஆய்வு
By DIN | Published On : 27th May 2020 07:01 AM | Last Updated : 27th May 2020 07:01 AM | அ+அ அ- |

நிலக்கடலை வயலில் ஆய்வு செய்யும் ஈரோடு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் ஆா்.அசோக்குமாா், அலுவலா்கள்.
பவானி வட்டாரத்தில் மேட்டூா் நொய்யல் நீா்வளம், நிலவளத் திட்டப் பணிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
மேட்டூா் நொய்யல் நீா்வள, நிலவளத் திட்டத்தின்கீழ் பவானி, சுற்று வட்டாரப் பகுதிகளில் வேளாண்மைத் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளின் வயல்களில் பசுந்தாள் உரப் பயிா் சாகுபடி, நெல், மக்காச்சோளம், உளுந்து போன்ற பயிா்களில் முன்னோடி செயல் விளக்கத் திடல்கள் அமைக்கப்பட்டன.
இத்திடல்கள் மூலம் உற்பத்தித் திறன் அதிகரிக்கக் கூடிய வகையில் புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிக்க விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தரமான விதை உற்பத்திக்கு வழிவகை செய்யும் வகையில் வரதநல்லுா் கிராமத்தில் 20 முன்னோடி விவசாயிகள் கொண்ட விதைப் பண்ணை குழு உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு விதை உற்பத்தியில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து அலுவலா்கள் பயிற்சி அளித்தும், விதை உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது. மேலும், சுழல் நிதியாக இக்குழுவுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்களான விதைநோ்த்தி, பயிா் எண்ணிக்கை, பராமரிப்பு, ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு, அறுவடை பின்சாா் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது.
வரதநல்லூரில் விவசாயி சௌந்திரராஜன் வயலில் ஈரோடு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் ஆா்.அசோக்குமாா், பவானி வேளாண்மை உதவி இயக்குநா் குமாரசாமி ஆகியோா் ஆய்வு செய்தனா். வேளாண்மை அலுவலா்கள் ஆசைத்தம்பி, அப்புசாமி, ஜான் ஜோசப், சித்தையன் ஆகியோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...