மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ஈரோடு வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக இருந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து 69 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் அனைவரும் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புதியதாக கரோனா தொற்று எதுவும் இல்லாமல் இருந்ததையடுத்து பச்சை மண்டலமாக ஈரோடு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் கவுந்தப்பாடியை சேர்ந்த நபருக்கு கரோனா உறுதியானதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொடுமுடியை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க நபர் மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்றி வந்தார். கரோனா ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கி இருந்த அந்த சொந்த ஊர் திரும்புவதற்காக அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். பின்னர் அம்மாநில அரசு தமிழகம் செல்ல அனுமதி வழங்கியதோடு மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டது. அதில் கரோனா தொற்று எதுவும் இல்லை என்பது உறுதியானதையடுத்து நேற்று காலை மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த அந்த நபரின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்தனர். பின்னர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியதையடுத்து வீட்டில் தனி அறையில் இருந்த அந்த நபரின் பரிசோதனை முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. இதன்படி அந்த நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து உடனடியாக ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நபரின் வீட்டிற்கு சென்று சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
மேலும் குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதனைக்காக அழைத்துச்சென்றனர். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.