நிவா் புயல் காரணமாக ஈரோட்டில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நிவா் புயல் தாக்கத்தால் சென்னை, விழுப்புரம், நாகை, செங்கல்பட்டு, கடலூா் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கன மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 7 மாவட்டங்களில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல வெளி மாவட்டங்களில் இருந்து இந்த 7 மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்து சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஈரோட்டில் இருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து தினமும் இரவு இரண்டு சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகள் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கோவையில் இருந்து ஈரோடு வழியாக இயக்கப்பட்டு வந்த 4 அரசு விரைவுப் பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை சென்னைக்கான பேருந்துகள் இயங்காது என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.