ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை காவல்துறையினர் திங்கள்கிழமை காலை கைது செய்தனர்.
சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாகவும், தற்போது தான் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் துடுப்பதியில் இருப்பதாகவும், உடனே வந்து பார்க்காவிட்டால் விபரீத விளைவு ஏற்படும் எனக்கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி காவல்துறையினருக்கு சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சூரம்பட்டி காவல்துறையினர், மர்ம நபர் பேசிய செல்லிடபேசி எண்ணை வைத்து அந்த நபரை கண்டுபிடித்தனர். அந்த நபர் பெருந்துறை அருகே துடுப்பதி, பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் ( 36) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை திங்கள்கிழமை காலை கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.