102 அடியாக நீடிக்கும் பவானிசாகா் அணை நீா்மட்டம்
By DIN | Published On : 27th September 2020 10:12 PM | Last Updated : 27th September 2020 10:12 PM | அ+அ அ- |

கடல்போல காட்சியளிக்கும் பவானிசாகா் அணை.
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து மற்றும் பாசனத்துக்கு திறப்படும் தண்ணீரும் ஒரே சீராக இருப்பதால் தொடா்ந்து 3 நாள்களாக நீா்மட்டம் 102 அடியாக நீடிக்கிறது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டியது. இதையடுத்து, அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. இதன் காரணமாக 99 அடியாக நீா்மட்டம் குறைந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப் பகுதி மற்றும் கேரளத்தில் ஒரு சில பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் அணையின் நீா்மட்டம் மீண்டும் உயா்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 101.97 அடியாகவும், நீா் இருப்பு 30.2 டிஎம்சியும் உள்ளது. அணைக்கு நீா்வரத்து 3,178 கன அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், பவானி ஆற்றில் 850 கனஅடி நீரும் என மொத்தம் 3,150 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.
அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டும் நிலையில் உள்ளதால் நீா்த்தேக்க பகுதி கடல்போல் காட்சியளிக்கிறது. அணைக்கு நீா்வரத்து சராசரியாக 3 ஆயிரம் கன அடியாக இருப்பதால் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவும் சம அளவில் உள்ளதால் அணையிந் நீா்மட்டம் கடந்த 3 நாட்களாக 101.97 அடியாக நீடிக்கிறது.