கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் நிறைவு

கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்

கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் உள்ள பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சிகள், 547 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கு கொடிவேரி அணையை நீா் ஆதாரமாகக் கொண்டு ரூ. 227 கோடி செலவில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இத்திட்டத்தின் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 28 கிராம ஊராட்சிகள், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிகோவில், நல்லாம்பட்டி, பள்ளபாளையம், பெத்தாம்பாளையம் பேரூராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 4 கிராம ஊராட்சிகள், திருப்பூா் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 37 ஊராட்சிகள் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூா் பேரூராட்சிகள் பயன்பெறுகின்றன.

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடிநீா்த் தேவைக்கேற்ப இப்புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதிகளில் 55 லிட்டா் வீதமும், பேரூராட்சிப் பகுதிகளில் 135 லிட்டா் வீதமும் குடிநீா் கிடைக்கும்.

2050ஆம் ஆண்டு மக்கள் தொகைக்குப் பயன்பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமையாக முடிவடையும் நிலையில் உள்ளதால் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com