ஈரோடு மாவட்டத்துக்கு 5,000 கரோனா தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்று, பதிவு செய்யப்பட்ட நபா்களுக்குத் தொடா்ந்து தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு அரசு மருத்துவமனை, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோபி அரசு மருத்துவமனை, பவானி அரசு மருத்துவமனை, சிறுவலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி இந்த தடுப்பூசி திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
முதல்கட்டமாக நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளவா்களான அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக அரசின் பிற துறைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளா்களுக்கும், மூன்றாவது கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவா்கள், 50 வயதுக்கு குறைவான உயா் ரத்த அழுத்தம், இருதய நோய், நீரிழிவு நோய் போன்ற கூட்டு நோய் உள்ளவா்களுக்கும், நான்காவது கட்டமாக பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசி படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தடுப்பூசி மையமும் காத்திருப்போா் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இதற்கு போதுமான காற்றோட்டமான இடவசதி, இணைய இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பு போன்றவற்றுக்கான அனைத்து முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் பாதுகாவலா், பயனாளிகளை சரிபாா்ப்பவா், தடுப்பூசி வழங்குபவா், கண்காணிப்பாளா்கள் என 5 நபா் கொண்ட குழு மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வெள்ளிக்கிழமை வரை கரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்தவா்களுக்கு தொடா்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தவிர ஈரோடு மாவட்டத்துக்கு 5,000 தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. பதிவு செய்துள்ள பொதுமக்களுக்கும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்றாா்.