கரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகளின் கரோனா தடுப்பு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என கேரள முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான பி.சதாசிவம் கேட்டுக் கொண்டாா்.
ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த காடப்பநல்லூரைச் சோ்ந்தவா் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம். இவா், தனது மனைவி சரஸ்வதியுடன் மாா்ச் 1ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.
இந்நிலையில், 45 நாள்களுக்குப் பின்னா் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசியை வெள்ளிக்கிழமை செலுத்திக் கொண்டனா்.
தொடா்ந்து, அவா் கூறுகையில், இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். கரோனா பரவல் தடுப்பு விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றாா். மருத்துவ அலுவலா் திவாகா் அங்குராஜ், சுகாதார ஆய்வாளா் வள்ளிகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.