ஈரோடு: 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் கரோனா காலத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க | 75-வது சுதந்திர தினம்: கோவையில் ஆட்சியர் கொடியேற்றினார்
பின்னர் காவல் துறையினர் மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர் தொடர்ந்து காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய் துறை, முன்னாள் படை வீரர், கரானா தடுப்பு முன்களப் பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 256 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள் 3 பேரின் இல்லத்திற்கு ஆட்சியர் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.
இதுபோன்று கரோனா தொற்று பரவல் காரணமாகவும் வயது மூப்பு காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 80 சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் இல்லங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.