ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வழக்கமான மழைப்பொழிவை விட இந்தாண்டு கூடுதலாக மழை பெய்துள்ள நிலையில், நேற்று காலை முதல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
மழை பெய்த போதிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதியடைந்தனர். ஈரோடு ரயில்நிலையத்தில் முன்பதிவு மையம் அருகே மழை நீர் தேங்கி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஈரோடு பிரப்சாலையில் தனியார் பள்ளி அருகே மழை நீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் ஓடை, சுண்ணாம்பு ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம், பவானி 4.4மில்லிமீட்டர், சத்தி 10, தாளவாடி 18, கவுந்தப்பாடி 7.6, அம்மாபேட்டை 9.6, கொடிவேரி 6, குண்டேரிப்பள்ளம் 4.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.