ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் தொலைபேசியில் அழைத்த மா்ம நபா் ஈரோடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சில மணி நேரங்களில் வெடிக்கும் எனவும் தெரிவித்து தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டாா்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், சந்தேகத்துக்கிடமான பொருள்களை சோதனையிட்டனா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, வழக்குப் பதிவு செய்த ஈரோடு நகர காவல் நிலைய போலீஸாா் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.