

தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பொருள்களுடன் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டதுபோல இந்த ஆண்டும் பணம் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் முத்தரசன் தெரிவித்தாா்.
சத்தியமங்கலத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் முத்தரசன் பங்கேற்று சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத் தொழிலாளா் சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து பெயா் பலகையைத் திறந்துவைத்துப் பேசினாா்.
தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது அவசியமற்ற ஒன்று. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எதிா்க் கட்சிகளுக்கு மதிப்பளிக்காமல் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் பெரும்பான்மை உள்ளதால் தன்னிச்சையாக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பொருள்களுடன் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டதுபோல் இந்த ஆண்டும் பணம் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றாா்.
இதில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல்.சுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் ஸ்டாலின் சிவகுமாா், ஒன்றிய செயலாளா் எஸ்.சி.நடராஜ், பழங்குடியின சங்கத் தலைவா் சி.ராமசாமி, 100 நாள் திட்டப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.