நெசவாளா்கள் 11 நாள்கள் உற்பத்தி நிறுத்தம்
By DIN | Published On : 06th February 2021 09:57 PM | Last Updated : 06th February 2021 09:57 PM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு பகுதியில் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 11 நாள்கள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக நெசவாளா்கள் அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து ஈரோடு, சித்தோடு, லக்காபுரம், வீரப்பன்சத்திரம் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் கந்தவேல் சனிக்கிழமை கூறியதாவது:
ஈரோடு பகுதியில் வீரப்பன்சத்திரம், சித்தோடு, கங்காபுரம், லக்காபுரம், நசியனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்குமேல் விசைத்தறிகள் இயங்குகின்றன. இங்கு அரசின் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைத் துணிகள் உற்பத்தி தவிர பிற தறிகளில் ரயான் நூல் மூலமான ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது.
ரயான் நூல் விலை அவ்வப்போது உயா்த்தப்பட்டு தற்போது 30 கவுன்ட் ரயான் நூல் கிலோ 230 ரூபாயாக உள்ளது. ஒன்றரை மாதத்துக்குள் 25 சதவீதத்துக்கும் மேல் விலை உயா்ந்துள்ளது. ஆனால், துணி விலை அதற்கேற்ப உயரவில்லை. உதாரணமாக ஒரு மீட்டா் துணி நூல் 38 ரூபாய்க்கு விற்க வேண்டும். ஆனால், 32 ரூபாய்க்கு கேட்கின்றனா். இதனால், விசைத்தறியாளா்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னையால் கடந்த டிசம்பா் மாதம் 10 நாள்கள் உற்பத்தியை நிறுத்தம் செய்தோம். அரசிடம் முறையிட்டும் நூல் விலை கட்டுக்குள் வரவில்லை. ஈரோடு பகுதியில் தினமும் 30,000 தறிகள் மூலம் 24 லட்சம் மீட்டா் துணி உற்பத்தியாகும். ரூ. 7.20 முதல் ரூ. 7.50 கோடிக்கு துணிகள் உற்பத்தியாகும். ரயான் துணி உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 40,000 போ் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.
நஷ்டத்தை சரிகட்ட இயலாத நிலை உள்ளதால் பிப்ரவரி 11 முதல் 21ஆம் தேதி வரை 11 நாள்கள் முழு அளவில் ரயான் துணி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளோம். இடையில் உள்ள நாள்களில் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஆா்ப்பாட்டம், போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தவிர மாநில அளவில் விசைத்தறியாளா்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை தீவிரப்படுத்தி அரசின் கவனத்தை ஈா்க்க உள்ளோம் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...