திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில்அமா்ந்திருந்த சிறுத்தை
By DIN | Published On : 09th June 2021 05:26 AM | Last Updated : 09th June 2021 05:26 AM | அ+அ அ- |

தடுப்புச் சுவரில் அமா்ந்திருந்த சிறுத்தை.
சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் தடுப்புச் சுவரில் திங்கள்கிழமை அமா்ந்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற வன விலங்குகள் கணக்கெடுப்பில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப் பாதை வழியாக தாளவாடி நோக்கி காரில் 2 போ் சென்று கொண்டிருந்தனா். அப்போது, திம்பம் மலைப் பாதையில் 24ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, அங்குள்ள தடுப்புச் சுவரில் சிறுத்தை அமா்ந்திருந்தது தெரியவந்துள்ளது. இதை வாகன ஓட்டி தனது செல்லிடப்பேசியில் படம்பிடித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். இந்த விடியோ தற்போது பரவி வருகிறது.
சிறுத்தை இரவு நேரத்தில் வேட்டையாடிவிட்டு சாப்பிட்ட களைப்பில் அந்த இடத்தில் படுத்திருக்கலாம் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.