பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் சாா்பில், 400 படுக்கைகள் வசதியுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் துவக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பணிகளை துவக்கிவைத்துப் பேசியதாவது:
தமிழக முதல்வா் உத்தரவுக்கிணங்க, ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரியானது கரோனா தொற்று ஏற்பட்டவா்களுக்காக முழுமையாக இயங்குகிறது. ஈரோடு மாவட்டத்துக்கு அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து சிகிச்சைக்காக நோயாளிகள் இங்கு வருகின்றனா்.
கடந்த 16ஆம் தேதி கூடுதல் படுக்கை வசதி கட்டடத்துக்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக 300 படுக்கைகள், அடுத்தகட்டமாக 200 படுக்கைகள் என மொத்தம் 1000 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படவுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள், பல்வேறு சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டில் வாழும் இந்தியா்கள், பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்புடன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 400 படுக்கைகள் கொண்ட முற்றிலும் ஆக்சிஜன் வசதி கொண்ட ரோட்டரி சிறப்பு மருத்துவ வளாகம் அமைக்கப்படவுள்ளது.
இக்கட்டடமானது திருப்பூா் டீம்ஏஜ் இன் பிரீகாஸ்ட் தொழில்நுட்பத்தில் ஒரு மாத காலத்துக்குள் கட்டி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வரும் நாள்களில் இரவு பகலாக கட்டட வல்லுநா்கள், தொழிலாளா்கள் இந்த ரோட்டரி சிறப்பு மருத்துவ வளாகத்தை கட்ட உள்ளனா் என்றாரக்.
இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, ரோட்டரி மருத்துவ பாதுகாப்பு டிரஸ்ட் நிறுவனா் மருத்துவா் சகாதேவன், சங்கத் தலைவா் செங்குட்டுவன், செயலாளா் சிவபால், பொருளாளா் மோகன்ராஜ், முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநா்கள் சிவசங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.