மின்சாரம் பாய்ந்து தம்பதி பலி
By DIN | Published On : 31st October 2021 11:53 PM | Last Updated : 31st October 2021 11:53 PM | அ+அ அ- |

முனியம்மாள்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிச்செவியூரில் மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி உயிரிழந்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிச்செவியூா் அரளிமலை பிரிவைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன் (69). இவா் விவசாயத்துடன், 40க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகளை வளா்த்து வந்தாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது இரண்டு கோழிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதனால் கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிசையை சுற்றிலும் இரவு நேரங்களில் இரும்புக் கம்பியை வைத்து மின் இணைப்பு கொடுத்துள்ளாா். இந்நிலையில், கோழிகள் அடைக்கப்பட்டிருந்த குடிசையை சுற்றி கம்பியில் சனிக்கிழமை இரவு மின் இணைப்பைக் கொடுத்துள்ளாா்.
மின் இணைப்பு கொடுத்திருப்பதை அறியாமல் கோழிகளுக்குத் தீவனம் வைப்பதற்காக ஆண்டியப்பனின் மனைவி முனியம்மாள் சனிக்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே முனியம்மாள் உயிரிழந்தாா்.
முனியம்மாளின் அலறல் சப்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வந்த ஆண்டியப்பன், மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நம்பியூா் போலீஸாா் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G