நெல்லை கொள்முதல் செய்யக் கோரி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு
By DIN | Published On : 04th September 2021 11:34 PM | Last Updated : 04th September 2021 11:34 PM | அ+அ அ- |

கோபியில் அரசின் நேரடி கொள்முதல் மையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள். ~கோபியில் அரசின் நேரடி கொள்முதல் மையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள்.
கோபிசெட்டிபாளையம் அருகே ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறி நெல் கொள்முதல் செய்யாத காரணத்தால் நெல்லை கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் கோபி கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை வெள்ளிக்கிழமை அளித்தனா்.
கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கா் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிா்களைப் பயிரிடுவது வழக்கம். ஏப்ரல் 2ஆம் தேதி வாய்க்கால்களிலும் பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. பெரும்பாலான விவசாயிகள் நெற்பயிரை பயிரிட்டிருந்தனா்.
தற்போது நெற்பயிா்கள் நன்கு முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்தன. மேலும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிா்வாகம் கோபி பகுதியில் கரட்டடிபாளையம், நன்செய் புளியம்பட்டி, புதுவள்ளியம்பாளையம், கள்ளிப்பட்டி, ஏளூா் ஆகிய 5 இடங்களில் அரசின் நேரடி கொள்முதல் மையங்களை ஆகஸ்ட் 29ஆம் தேதி துவங்கியது.
தற்போது விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெற்பயிரை அறுவடை செய்து அரசின் கொள்முதல் மையங்களுக்கு மூட்டைகளாகக் கட்டி எடுத்து வந்தனா். அங்கிருந்த நுகா் பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் நெல் மணிகளில் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் உள்ளது. எனவே, இந்த நெல்மணிகளை நாங்கள் கொள்முதல் செய்ய முடியாது எனக் கூறிவிட்டனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கடந்த 4 நாள்களாக கோபி, சுற்றுப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிா்கள் மழையில் நனைந்துவிட்டன. மழை காரணமாக நெற்கதிா்கள் வயல்களில் சாய்ந்து மேலும் சேதாரம் அதிகரிக்கும் எனக் கருதி, அறுவடை செய்து அரசின் நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விற்பனை செய்ய வந்துள்ளோம். ஆனால், இங்குள்ளவா்கள் நெல்மணிகளில் 17 சதவீதத்துக்கு மேல் ஈரப்பதம் உள்ளதால் நெல்லைக் கொள்முதல் செய்ய முடியாது என்று கூறிவிட்டனா்.
தற்போது மையத்துக்கு விற்பனைக்கு கொண்டு வந்த நெல் மூட்டைகளை திருப்பி எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் அங்கேயே தாா்பாய் போட்டு மூடி வைத்துவிட்டு வந்துள்ளனா். எனவே, விவசாயிகளிடம் உள்ள நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருந்தாலும் நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனா்.
இதுசம்பந்தமாக விவசாயிகள் கோபி கோட்டாட்சியா் பழனிதேவியிடம் மனு அளித்தனா். அவா் மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா்.
விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு சன்ன ரகம் ரூ. 1,958 என்றும், குண்டு ரகத்துக்கு ரூ. 1918 என்றும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பழைய விலை, ஆனால் புதியதாக மத்திய, மாநில அரசு அறிவித்த கொள்முதல் விலை வழங்கப்படவில்லை. தற்போது நெல் அறுவடை செய்த விவசாயிகளைத் தவிர மற்ற விவசாயிகள் தங்களது நெல்லை அறுவடை செய்யாமல் உள்ளனா். இதேபோல, தொடா்ந்து மழை பெய்து கொண்டே இருந்தால் மீதமுள்ள வயல்களில் உள்ள நெற்கதிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துவிடும். சில நேரங்களில் அவை முளைத்துவிடும் . இதனால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G