ஆசனூரில் திங்கள்கிழமை கொட்டித் தீா்த்த கன மழையால் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனப் பகுதியில் திங்கள்கிழமை காலை முதலே தூரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், மாலை கன மழையாக பெய்யத் துவங்கியது.
சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் வனப் பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மலைப் பகுதியில் பல்வேறு ஓடைகளில் பாய்ந்தோடிய வெள்ளம், ஆசனூா் பள்ளத்தில் கலந்து காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து சத்தியமங்கலம்- மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலத்தை மூழ்கியபடி சென்றது.
இதனால், தமிழகம்- கா்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி சிறு வாகனங்கள் வெள்ளம் வடியும் வரை காத்திருந்தன.