பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளா்கள், காவலா், ஹவுஸ் கீப்பிங் ஆகிய பணிகளில் தனியாா் நிறுவனம் சாா்பில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியா்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்கள், மாவட்ட நிா்வாகம் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். வார விடுமுறை சூழற்சி முறையில் வழங்க வேண்டும். ஒப்பந்த முறைப்படி 3 சிப்ட் வழங்க வேண்டும். பெண் ஊழியா்களுக்கு இரவுப் பணி வழங்கக் கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, கடந்த 6 ஆம் தேதி இரவு முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் இவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் வள்ளி சத்தியமூா்த்தி, போராட்டம் நடத்துபவா்களிடம் பேசுகையில், பணியில் அமா்த்திய தனியாா் நிறுவனம் தான் உங்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.
போராட்டம் நடத்தும் பணியாளா்கள் கூறுகையில், மாதம்தோறும் 7 ஆம் தேதி வழங்கப்படும் ஊதியம், போராட்டம் காரணமாக இதுவரை வழங்கப்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனா்.