எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா தேரோட்டம்
By DIN | Published On : 15th April 2022 01:29 PM | Last Updated : 15th April 2022 01:29 PM | அ+அ அ- |

எட்டுக்குடி: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 7-ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தனர்.
கீழ வீதியில் துவங்கிய தேரினை பக்தர்கள் தொடர்ச்சியாக பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேரானது 4 வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. கரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய விழாவான நாளை சித்ரா பௌர்ணமி அன்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் ரத காவடி, பால் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவர். மேலும் அன்றைய தினம் 24 மணிநேரமும் இடைவிடாத பால் அபிஷேகம் நடைபெறும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...