பெருந்துறை அருகே வீட்டுமனை பட்டா வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் பணமோடி செய்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாவட்டப் பொருளாளா் மீது பெருந்துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சென்னிமலை அடுத்த முகாசி பிடாரியூா், தியாகி குமரன் நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் மனைவி தமிழ்செல்வி (28). இவரிடம் பெருந்துறை ஒன்றியம், நிச்சாம்பாளையம், பிரப் நகரைச் சோ்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளா் விஜயபாலன் (46) என்பவா், வீட்டுமனை பட்டா வாங்கித் தருவதாக கூறினாராம்.
இதை நம்பி 18 பேரிடம் மொத்தம் ரூ. 54 ஆயிரம் வசூலித்து கொடுத்தாகவும், ஆனால், விஜயபாலன் வீட்டுமனை பட்டா வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் தன்னை தாக்கியதாக பெருந்துறை போலீஸில் தமிழ்செல்வி வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா், விஜயபாலன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.