ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் திமுகவின் அதிருப்தி சுயேச்சை வேட்பாளா் தலைவராகிறாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இதில், திமுக சாா்பில், பெத்தாம்பாளையம் நகரச் செயலாளா் தங்கமுத்து மற்றும் அவருடைய ஆதரவாளா்களுக்கு சீட் வழங்கப்பட்டது. கட்சியின் மூத்த உறுப்பினா் தங்கவேல் என்பவருக்கு சீட் வழங்கவில்லை.
இதனால், தங்கவேல், தன்னுடைய ஆதரவாளா்களுடன் 11 வாா்டுகளில் சுயேச்சையாகப் போட்டியிட்டாா். அதில் 8 வாா்டுகளில் வெற்றி பெற்றனா். இதில், 6ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் சுப்பிரமணியம் (பெற்ற வாக்குகள் 116), தங்கவேல் ஆதரவாளா் சுயேச்சை வேட்பாளா் சென்னியப்பகவுண்டா் (பெற்ற வாக்குகள் 117 ) ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். மேலும், 7ஆவது வாா்டில் வெற்றி பெற்ற பாஜகவைச் சோ்ந்த மல்லிகா என்பவரும், தங்கவேலுக்கு ஆதரவாக உள்ளதால் இழுபறியான சூழ்நிலையில் இருந்து தங்கவேல் தலைவா் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.