ஈரோடு மாவட்டத்தில் 503 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜனவரி 22) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா மூன்றாம் அலை பரவலைத் தடுக்க மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். மேலும், 60 வயது நிறைவடைந்து, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களானவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் செலுத்தப்படும்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 503 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும். இப்பணியில் 2,012 பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா்.